நியூசிலாந்து-இலங்கை இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் முதல் 2 ஆட்டங்களில் வென்ற நியூசி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இந்த 2 அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஆட்டம் நெல்சனில் நேற்று நடந்தது. முதல் 2 ஆட்டங்களில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதுபோல் நேற்று டாஸ் வென்ற நியூசி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் களம் இறங்கிய இலங்கையின் விக்கெட்டுகளும் ஆரம்பத்தில் சீரான இடைவெளியில் சரிந்தன.
கேப்டன் அசலங்கா, குசால் பெரேரா இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், 4வது விக்கெட்டுக்கு 100ரன் சேர்த்தனர். அரை சதத்தை நெருங்கிய அசலங்கா 46(24பந்து,1பவுண்டரி, 5சிக்சர்) ரன்னிலும், சதம் விளாசிய குசால் 101(46பந்து, 13பவுண்டரி, 4சிக்சர்) ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். அடுத்த ஓவரில் இன்னிங்ஸ் முடிய இலங்கை 20ஓவருக்கு 5விக்கெட் இழந்து 218ரன் குவித்தது. நியூசி தரப்பில் பந்து வீசிய 7வீரர்களில் 5பேர் தலா ஒரு விக்ெகட் எடுத்தனர்.
அதனையடுத்து 219ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூசி. தொடக்க ஆட்டக்காரர்கள் டிம் ராபின்சன் 37(21பந்து, 2பவுண்டரி, 2சிக்சர்), ரச்சின் ரவீந்திரா 69(39பந்து, 5பவுண்டரி,4சிக்சர்)ரன் என நல்ல தொடக்கத்தை தந்தனர். அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியனுக்கு ஓடினர். இடையில் வந்த டேரியல் மிட்செல் 17பந்தில் 35ரன் வெளுத்தார்.
அதிலும் அசலெங்கா வீசிய 15வது ஓவரில் 4சிக்சர் உட்பட 25ரன் சேர்த்தார். அதன் பிறகு கேப்டன் மிட்செல் சான்டனர் 14, ஜாக்ரி ஃபோக்ஸ் 21ரன் எடுத்து ஸ்கோர் 200யை கடக்க உதவினர். எனினும் 20ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு நியூசி 211ரன் மட்டுமே சேர்த்தது. அதனால் இலங்கை 7ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. அசலங்கா 3, அசரங்கா தலா2 விக்கெட் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் ஒயிட்வாஷில் இருந்து இலங்கை தப்பியது. நியூசி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.












