24 ஹெச் கார் ரேஸிங்கில் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்று வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் அஜித்குமார் அணி முதல் தகுதி சுற்றில் 7வது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று 2வது தகுதி சுற்று நடைபெற்றது. இன்று கோப்பைக்கான இறுதி சுற்று போட்டி நடைபெற உள்ளது. நேற்று பிற்பகல் மைதானத்துக்கு வந்த அஜித் கொடுத்த பேட்டியில் கூறியது: இந்த கார் பந்தயத்தை காண என் ரசிகர்கள் இவ்வளவு பேர் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் மீது நான் வைத்துள்ள அன்பு அளவு கடந்தது. அவர்களை கட்டுப்பாடின்றி காதலிக்கிறேன். 2 படங்கள் நடித்து முடித்துள்ளேன். ஒரு படம் (விடாமுயற்சி) இம்மாதம் ரிலீசாக உள்ளது. இன்னொரு படம் (குட் பேட் அக்லி) ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீசாகிறது. எனக்கு ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை செய்வதில் விருப்பம் இல்லை.
அதனால் ஒரு நேரத்தில் ஒரு துறையில் மட்டும் கவனம் செலுத்துவேன். அதன்படி நடிக்கும்போது அதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். இப்போது ரேஸிங்கிற்கு வந்துவிட்டேன். இதில் மட்டுமே சில மாதங்கள் கவனம் செலுத்துவேன். நடிப்பும் ரேஸும் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்டது என்றார் அஜித். அப்போது பார்வையாளர் அரங்கில் இருந்த ரசிகர்கள் அஜித்தை பார்த்து கோஷமிட, அதனை கவனித்த அஜித், தனது ரசிகர்களுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்தார்.
- திடீர் விலகல்
பிற்பகலில் போட்டியில் பங்கேற்பது பற்றி மகிழ்ச்சியாக பேட்டியளித்தார் அஜித். ஆனால் மாலையில் கார் பந்தயம் தொடங்குவதற்கு சற்று நேரம் முன் பந்தயத்திலிருந்து விலகுவதாக திடீரென அஜித் அறிவித்தார். தனது அணியின் வெற்றி மற்றும் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்திருப்பதாகவும் தொடர்ந்து தனது அணி பந்தயத்தில் பங்கேற்கும் என்றும் அவர் அறிக்கை மூலம் தெரிவித்தார். சமீபத்தில் பயிற்சியின்போது அஜித் விபத்துக்குள்ளானார். மேலும் உடல் நலம் காரணமாகவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.












