தென் கொரிய அதிபராக இருந்த யூன் சுக் இயோல் கடந்த 3ம் தேதி இரவு அந்நாட்டில் திடீரென அவசரநிலை ராணுவச் சட்டத்தை அறிவித்தார். இந்த திடீர் அறிவிப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால், சுமார் 6 மணி நேரங்களில் இந்த ராணுவ அவசர நிலை சட்டம் திரும்ப பெறப்பட்டது.
இதனை தொடர்ந்து யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.பின்னர் கடந்த 14ம் தேதி அந்நாட்டின் இடைக்கால அதிபராக, பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார். திடீர் அவசரநிலை பிரகடனத்தில் ஹான் டக்-சூவுக்கும் முக்கிய பங்கு இருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானம் இடைக்கால அதிபருக்கு எதிராக அமைந்ததால், அவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே தென்கொரிய ஊழல் தடுப்பு அமைப்பு முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை கைது செய்ய கோரி நீதிமன்றத்தில் கைது வாரண்ட்டுக்கு விண்ணப்பித்து இருந்தது. தற்போது நீதிமன்றம் யூன் சுக் இயோலை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் சோதனை செய்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் அவர் கைது செய்யப்படக்கூடும் என்பதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.












