சபரிமலையில் புத்தாண்டு தினமான நேற்று ஐயப்பனை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். 10 மணிநேரத்திற்கும் மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் (31ம் தேதி) முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கின.நடை திறந்த அன்றிலிருந்தே தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். நேற்று முன்தினம் 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நேற்று புத்தாண்டு தினம் என்பதால் நேற்று முன்தினம் வந்த பக்தர்கள் நேற்று காலை தரிசனம் செய்த பின்னரே திரும்பினர். இதனால் நேற்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.நேற்றும் 85 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று 10 மணிநேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நெய்யபிஷேகம் செய்வதற்கும், அப்பம், அரவணை பிரசாதம் வாங்குவதற்கும் நீண்ட வரிசை காணப்பட்டது.












