வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 2-வது முறையாக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. வங்கதேசத்தில் வெடித்த மாணவர்களின் போராட்டத்துக்கு அடிபணிந்து, அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5 ம் தேதி தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனால் அவரது 16 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு ஏற்பட்டது. இதையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், 16 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தனது ஆட்சிக்காலத்தில், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் மீது மனித உரிமை மீறல்கள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் ஜூலையிலிருந்து ஆகஸ்ட் மாதத்திற்குள் அதிகப்படியான குற்றங்கள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே, தாக்காவில் உள்ள சர்வதேச குற்ற தீர்ப்பாயம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, பல்வேறு முன்னாள் அமைச்சர்கள், ஹசீனாவின் முன்னாள் ஆலோசகர்கள் ஆகியோருக்கு எதிராக கடந்த அக்டோபர் மாதம் கைது வாரண்ட் பிறப்பித்தது. அதில் ஹசீனாவை கைது செய்து நவ.,18க்குள் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இருப்பினும் உத்தரவு செய்யப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 2-வது முறையாக ஹசீனாவை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளது.












