விபத்துக்குள்ளான அஜர்பைஜான் விமானத்தை தவறுதலாக ரஷ்யா தான் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அஜர்பைஜான் நாட்டை சேர்ந்த பயணிகள் விமானம் கடந்த 25ம் தேதி திடீரென தரையில் மோதி வெடித்து சிதறியது. இதில் 67 பயணிகளில் 38 பேர் இறந்தனர். 29 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்திற்கு விமானம் மீது பறவை மோதியது காரணமாக இருக்கலாம் என ரஷ்யா முதலில் கூறியிருந்தது.
ஆனால் விமானத்தின் முன் பகுதியில் பெரிய ஓட்டை இருந்ததாகவும், அதன் வால் பகுதியில் குண்டுகளால் ஏற்படும் சேதம் இருப்பதாகவும் நிபுணர்கள் தகவல் வெளியிட்டனர். எனவே, ரஷ்யா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். ரஷ்ய வான்வெளியில் நடந்தது சோகமான சம்பவம் என குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் விடுத்த அறிக்கையில், ‘உக்ரைன் டிரோன்கள் குரோஸ்னி அருகே நடத்திய தாக்குதல் காரணமாக வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் இருந்தன. அந்த சமயத்தில் அஜர்பைஜான் பயணிகள் விமானம் வந்ததால் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தவறுதலாக அந்த விமானத்தை தாக்கி உள்ளன’ என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே உக்ரைன் போரால் சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் கைது வாரண்ட் பிறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் ரஷ்ய அதிபர் புடினுக்கு சர்வதேச அளவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.












