மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி சீக்கிய முறைப்படி நேற்று யமுனை நதியில் கரைக்கப்பட்டது. பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் கடந்த 2004ம் ஆண்டு ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தபோது இந்தியாவின் 13வது பிரதமராக பதவி ஏற்றார். முதுமை காரணமாக கடந்த 27ம் தேதி மன்மோகன் சிங் தன் 92வது வயதில் காலமானார்.
அவரது உடல் நேற்று முன்தினம் நிகாம்போத் காட் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் நிகாம்போத் காட்டில் இருந்து அவரது அஸ்தி சேகரிக்கப்பட்டு குருத்வாரா அருகே உள்ள யமுனை நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர், அவரது மகள்கள் உபிந்தர் சிங், தமன் சிங் மற்றும் அம்ரித் சிங் ஆகியோர் முன்னிலையில் சீக்கிய முறைப்படி யமுனை நதியில் அஸ்தி கரைக்கப்பட்டது.








