தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அனல் மின்நிலைய விபத்தில், 2 தொழிலாளர்கள் உடல் நசுங்கிப் பலியானார்கள், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. எனவே, அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். இந்த விபத்து குறித்து தனி ஆணையம் அமைத்து முறையாக விசாரணை செய்ய வேண்டும். இந்த விபத்தை சாதாரணமாக கடந்து போக முடியாது, அதுமட்டுமல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












