கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக இணைப்பதற்கு பொருளாதார ரீதியில் அழுத்தம் தரப்படும் என்று அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். டிரம்ப் தனது வெற்றிக்கு பின் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்தார். அப்போது முதல் கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைக்கும் யோசனையை டிரம்ப் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். தான் அதிபரான பின் அமெரிக்காவின் மானியங்கள் உள்ளிட்ட உதவிகள் கனடாவுக்கு கிடைக்காது என்பதை அறிந்தே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகி இருப்பதாக டிரம்ப் கருத்து தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஃபுளோரிடாவில் நேற்று பேசிய டிரம்ப், அமெரிக்காவின் 51வது மாநிலமாக கனடாவை இணைப்பதற்கு தனது ஆட்சியில் அந்நாட்டிற்கு பொருளாதார ரீதியில் அழுத்தம் தரப்படும் என்று கூறினார். கனடா போன்றே அமெரிக்காவின் மறு எல்லையில் உள்ள மெக்சிகோவுக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவோரை தடுக்கவும், போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கவும் மெக்சிகோ அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரி விகிதங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.












