திபெத், நேபாளத்தில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 129 பேர் பலியாகி உள்ளனர். டெல்லி, பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.
திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றான ஷிகாட்சேவில் நேற்று காலை சுமார் 9 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் திரண்டனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.1 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சம்பவங்களில் இதுவரை 129 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 130 பேர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சீன நிலநடுக்க நிர்வாகம் இரண்டாவது நிலை அவசரகால எச்சரிக்கையை அறிவித்துள்ளது. ஜிசாங் தன்னாட்சி பிராந்தியமும் இரண்டாம் நிலை அவசரகால எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கம் குறித்து அறிந்து சீன அதிபர் ஜீ ஜின்பிங் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 22000 தற்காலிக கூடாரங்கள், துணிகள் மற்றும் சிறப்பு நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 1500க்கும் மேற்பட்ட உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 6900 பேர் வசிக்கும் டிங்ரி கவுண்டியின் சோகோ குடியிருப்பில் நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது. நேபாளத்தின் லோபுச்சிக்கு வடமேற்கே 90 கி. மீ. தொலைவில் 10 கி. மீ. ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது. நேபாள காத்மண்டுவில் பீதியடைந்த பொதுமக்கள் அலறியடித்து சாலைகளில் திரண்டதால் பதற்றம் நிலவியது. நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி, பீகாரின் எல்லையோர பகுதிகளில் உணரப்பட்டது. ஆனால் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. இதேபோல் மணிப்பூர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்திலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டது. அதேபோல் ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்திலும் நில நடுக்கம் ஏற்பட்டது.












