நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், நாட்டின் ஜிடிபி 5.4 சதவீதமாக சரிந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டில் கடந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 5.4 சதவீதமாக உள்ளது. இது 2 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும். இருப்பினும் மேற்கண்ட காலாண்டில் விவசாய துறையின் மொத்த மதிப்பு கூட்டு 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதற்கு முந்தைய ஆண்டு இது 1.7 சதவீதமாக இருந்தது. அதேநேரத்தில், உற்பத்தித்துறை 2.2 சதவீமாகவும், சுரங்கம் மற்றும் குவாரி தாழில்கள் 0.01 சதவீதமாகவும் சரிந்துள்ளது.மின்சாரம், எரிவாயு, தண்ணீர் சேவை துறைகள் 3.3 சதவீதம் உயர்ந்துள்ளன. இவை கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 10.5 சதவீத வளர்ச்சி பெற்றிருந்தன.
2022-23 நிதியாண்டின் அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் ஜிடிபி 4.6 சதவீதமாக இருந்ததே இதற்கு முன்பிருந்த குறைந்த அளவாகும். பின்னர், கடந்த 2023-24 நிதியாண்டின் இதே காலாண்டில் ஜிடிபி 8.1 சதவீதமாக உயர்ந்திருந்தது. கடந்த காலாண்டில் டிஜிபி சரிந்திருந்தாலும், நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இவ்வாறு புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.











