வங்கதேசத்தில் உள்ள இந்துக்களின் நிலைமை குறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவு துறை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பதிலளிக்கையில்,‘‘ வங்கதேசத்தில் உள்ள இந்துகள் சிறுபான்மையினரின் நிலைமை குறித்து அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அங்கு இதுவரை நடந்த சிறுபான்மையினருக்கு எதிரான கலவரத்தில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 80 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். துர்கா பூஜையின் போது வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் தாக்கப்பட்டனர்.
வீடுகள், வர்த்தக நிலையங்கள், இந்து கோயில்களும் தாக்கப்பட்டுள்ளன. டாக்காவில் உள்ள தன்டி பஜார் பகுதியில் பூஜை மண்டம் மீது தாக்குதல் நடந்துள்ளது. சத்கிரா பகுதியில் ஜெஸ்ரோஸ்வரி காளி கோயிலில் விலை மதிப்பற்ற பொருட்கள் திருட்டு போயுள்ளன. அங்கு உள்ள சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பது குறித்து டாக்காவில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் அந்த நாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.எனினும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்வது வங்கதேச அரசின் முழு பொறுப்பு ஆகும்’’ என்றார்.












