ரயிலுக்குள் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் கொலை மற்றும் தீ வைத்த குற்றச்சாட்டில் ஒருவரை நியூயார்க் நகர போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் புரூக்ளின் நகா் நோக்கி ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. மன்ஹாட்டன் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அந்த ரயிலில் ஒரு இளம்பெண் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ஒரு வாலிபர் 33 வயதான செபாஸ்டியன் சபேட்டா அவரது ஆடையில் தீ வைத்தார்.
இதனால் உடல் முழுவதும் தீ பற்றியதால் இளம்பெண் அலறி துடித்தார். ஆனால் அவர் சாகும்வரை அந்த வாலிபர் நின்று ரசித்துக் கொண்டிருந்தார். பின்னர் மன்ஹாட்டன் ரயில் நிலையத்தில் இறங்கிய அவா் சாதாரணமாக நடந்து சென்றார். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் செபாஸ்டியன் சபேட்டாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முன்விரோத தகராறில் இந்த கொலையை செய்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து குவாத்தமாலாவைச் சேர்ந்த சபேட்டா இதற்கு முன்னர் நாடு கடத்தப்பட்டவர் என்றும், அமெரிக்காவில் இருக்க அவருக்கு அனுமதி இல்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், புரூக்ளினில் உள்ள கோனி தீவு-ஸ்டில்வெல் அவென்யூ நிலையத்தில் நின்றுகொண்டிருந்த எஃப் ரயிலில், இன்னும் அடையாளம் காணப்படாத அந்தப் பெண்ணை ஒரு ஆண் அமைதியாக அணுகியதை கண்காணிப்பு வீடியோ காட்டுகிறது. சில நொடிகளில் அவரது ஆடைகள் முழுவதும் தீ பற்றியது. ஒரு நபர் மற்றொரு மனிதனுக்கு எதிராகச் செய்யக்கூடிய மிக மோசமான குற்றங்களில் ஒன்று என்று நியூயார்க் நகர காவல்துறை ஆணையர் ஜெசிகா டிஷ் கூறினார்.












