- அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
- ஆய்வுக்கு பின் டிஆர்ஓ தகவல்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு தொழிற் பயிற்சி நிலைய மைதானத்தில் மாபெரும் அரசுப் பொருட்காட்சியினை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைக்க உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் அரசு தொழிற் பயிற்சி நிலைய மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி-2025க்கான பணிகள் நடைபெறுவதை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தெரிவித்ததாவது.தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு தொழிற் பயிற்சி நிலைய மைதானத்தில் இன்று மாலை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் மாபெரும் அரசுப் பொருட்காட்சியினை தொடங்கி வைப்பதை முன்னிட்டு பொருட்காட்சி பணிகள் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி, நேற்று ஆய்வு செய்யப்பட்டது. மாபெரும் அரசுப் பொருட்காட்சியானது இன்று முதல் 45 நாட்கள் வரை நடைபெற உள்ளது.
இப்பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, உயர்கல்வித் துறை, சுற்றுலாத் துறை, குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத் துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை, தோட்டக்கலைத் துறை, பொதுப் பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை.
பள்ளிக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கைத்தறி மற்றும் கதர் கிராமத் தொழில் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மீன்வளத்துறை போன்ற பல்வேறு துறை சார்ந்த அரங்கங்களும், பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள். பல்வேறு வகை சார்ந்த உணவு அரங்குகள் இக்கண்காட்சியில் இடம் பெற உள்ளது.
மேலும், அழகு சாதனப் பொருட்கள், உணவுத் திருவிழா, சிறியவர் முதல் பெரியவர் வரை விளையாடி மகிழும் பொழுதுபோக்கு அம்சங்கள், 3டி ஷோ, பனி உலகம் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் கண்டு களிக்கலாம். இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் செந்தில் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.












