அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு: திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற வாயிலில் நடந்த இக்கொலையை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், சென்னை தி.நகரில் வங்கிக்குள் புகுந்து வங்கி ஊழியரின் காது வெட்டு, சிவகங்கையில் தாயின் கண்ணெதிரே மகனை மர்ம கும்பல் வெட்டிக்கொலை, சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் 5 பேருக்கு கத்திக்குத்து.
‘தனிப்பட்ட கொலைகள்’ என்று இன்னும் எத்தனை நாட்கள் தான் சட்டம் -ஒழுங்கு சீர்கேடுகளை கடந்து செல்லப்போகிறது? சட்டத்தின் மீதோ, அதை காக்கும் இடத்தில் உள்ள அரசின் காவல்துறை மீதோ குற்றவாளிகளுக்கு அச்சம் அறவே இல்லாத அளவிற்கு சட்டம்- ஒழுங்கை கண்டுகொள்ளாத அரசுக்கு கண்டனம். மேற்சொன்ன குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் -ஒழுங்கை காப்பதில் கவனம் செலுத்துமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.










