தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்பன் சீசன் என்பது தொடங்கி விடும். ஏனென்றால் கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் அனைவருமே கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பனை நினைத்துக் கொண்டு பல்வேறு வேண்டுதல்களுடன் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து பிறகு ஐயப்பன் கோவிலுக்குச் சென்று ஐயப்பனை வழிபடுவது என்பது வழக்கம்.
இதனை அடுத்து ஐயப்பனுக்காக விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்கள் அனைவருமே தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்வார்கள்.அந்த வகையில் மதுரை அழகர் கோவிலில் இருக்கக்கூடிய 18-ம் படி கருப்பு ந சுவாமியை தரிசனம் செய்வதற்கு என்று ஐயப்ப பக்தர்கள் அனைவரும் அழகர் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.
அதாவது பல்வேறு மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஐயப்ப பக்தர்கள் அனைவரும் பெரிய பெரிய வேன், பேருந்து ஆகியவற்றில் 20, 30 பேருடன் இணைந்து வந்த ஐயப்ப பக்தர்கள் அனைவரும் கோவிலில் ஆங்காங்கே தங்களுடைய வாகனங்களை நிறுத்திவிட்டு, பின்பு அழகர் கோவிலின் காவல் தெய்வமான 18ம் படி கருப்பண சுவாமியை குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் என அனைவரும் தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து ஐயப்ப பக்தர் ஒருவர் கூறும் பொழுது,விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய திருவக்கரை என்ற ஊரில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனுக்காக மாலை போட்டுவிட்டு அனைவருமே ஒவ்வொரு கோவிலுக்கு செல்வது என்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு மதுரை அழகர் கோவிலுக்கு வந்து பதினெட்டாம் படி கருப்பண சுவாமியை தரிசனம் செய்தோம்.
இதற்குப் பின் மதுரையில் போகும் வழியில் உள்ள கோவில்களை தரிசனம் செய்துவிட்டு, பின்பு திருச்செந்தூர் செல்வதாக இருக்கின்றோம் என்று கூறினார். மேலும், ஐயப்பன் சீசன் தொடங்கி இருப்பதால் அழகர் கோவிலில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அழகர் கோவில் பகுதியில் ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












