சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் 2 நாட்கள் நடைபெறும் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்;
“ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு பெருகும்”: முதல்வர்
ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் குறையாது, வேலைவாய்ப்புகள் பெருகத்தான் செய்யும். சரியான திசையை நோக்கி மாநாட்டை ஒருங்கிணைத்துள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு நன்றி. தமிழ்நாட்டின் நீடித்த, நிலையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் மாநாடு. வணிகத்தையும் தொழில்நுட்பத்தையும் ஊக்குவிப்பதில் மற்றவர்களை விட முன்னோடியாக தமிழ்நாடு உள்ளது. மின்வாகன உற்பத்தி, வளரும் தொழில்நுட்பங்களை மாற்றங்களை ஏற்படுத்தும் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.
கூடுதல் வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு செல்ல வேண்டும்: முதல்வர்
இன்னும் கூடுதல் வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இன்று நாம் அடுத்தகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். கோவை, சேலம், மதுரை, திருச்சி, ஒசூர், நெல்லை, வேலூர், விழுப்புரம், தூத்துக்குடியில் எல்காட் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 2ம் கட்ட, 3ம் கட்ட நகரங்களில்கூட எல்காட் தொழில்நுட்ப பூங்காக்கள் தொடங்கப்பட்டுள்ளன.
நகரத்தில் மட்டும் வளர்ச்சி குவியக்கூடாது: முதல்வர்
நகரத்தில் மட்டும் வளர்ச்சி குவியக்கூடாது. உண்மையான வளர்ச்சி சமச்சீராக பரந்துபட்டதாக இருக்க வேண்டும். 900-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் பயன்பெற அரசு செயல்பட்டு வருகிறது. 2,000க்கும் மேற்பட்ட தொழில்முனைவோருக்கு வழிகாட்டியாக திமுக அரசு உள்ளது. ஐ.டி. துறை வளர மனிதவளங்கள் மிக முக்கியம்; அதற்காகவே எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் உருவாக்கினேன். தொழில்சார்ந்த திறன்களை வளர்க்க நான் முதல்வன் திட்டம் பெரும் உதவியாக உள்ளது. கடந்த ஓராண்டில் 10,035 ஆசிரியர்கள், 34267 மாணவர்கள் தொழில்சார்ந்த நிறுவனங்களுக்கான பயிற்சி பெற்றிருக்கின்றனர்.
இ-சேவை மையங்கள் இரு மடங்கு உயர்வு: முதல்வர்
இ-சேவையை பொதுமக்களுக்கு முழுமையாக வழங்க தகவல் தொழில்நுட்பம் திறம்பட பயன்படுத்தப்படுகிறது. அரசின் அனைத்து சேவைகளும் ஆன்லைனில் வழங்கப்பட வேண்டும்; மக்களின் அலைச்சல், நேரம் மிச்சமாக வேண்டும். 2021-ல் 14927-ஆக இருந்த இ-சேவை மையங்கள் 2024 முடிவில் 33,554 ஆக இரு மடங்கு அதிகரித்துள்ளது. இனி மக்களுடைய எல்லா பயன்பாடுமே டிஜிட்டல் வழியாகத்தான் இருக்கும். முறைகேடு செய்ய நினைக்கிறவர்களை தடுக்கும் வகையிலான பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும். டிஜிட்டல் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும், அதற்கேற்ற தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












