மலேசியாவில் நடந்து வரும் மலேசியா ஓபன் பேட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் அதிர்ச்சித் தோல்வியுற்றார். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் மலேசியா ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த ஒரு போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், சீன வீரர் சி யு ஜென்னுடன் மோதினார். துவக்கம் முதலே லக்ஷயா சென், சீன வீரருக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினார்.
முதல் செட்டை 21-14 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற சீன வீரர், இரண்டாவது செட்டில் அற்புதமாக ஆடி 21-7 என்ற புள்ளிக் கணக்கில் அதையும் கைப்பற்றினார். இதனால் அதிர்ச்சித் தோல்வியுடன் லக்ஷயா சென் வெளியேறினார். சமீபத்தில் இந்தியாவின் லக்னோவில் நடந்த சையத் மோடி சர்வதேச பேட்மின்டன் போட்டியில் முதலிடத்தை பிடித்த லக்ஷயா சென், சர்வதேச கிங் கோப்பை பேட்மின்டன் போட்டியிலும் சிறப்பாக ஆடி மூன்றாம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












