நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. வெலிங்டனில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் 2வது போட்டி நேற்று ஹாமில்டனில் நடந்தது. மழையால் பல மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியதால் ஓவர்களின் எண்ணிக்கை 37 ஆக குறைக்கப்பட்டது.
டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா 79, மார்க் சாப்மன் 62, டாரியல் மிட்செல் 38 ரன் விளாசினர். மற்றவர்கள் குறைந்த ரன்னில் வெளியேறினாலும் 37 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 255 ரன் என கவுரவமான ஸ்கோரை அந்த அணி எட்டியது. இலங்கை வீரர்களில் மகிசா தீக்ஷனா 4, வனிந்து ஹசரங்கா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து, 37 ஓவரில் 256 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை ஆரம்பம் முதலே தடுமாறியது. ஒரு கட்டத்தில் 4.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 22 ரன் மட்டுமே எடுத்திருந்தது. இடையில் அதிகபட்சமாக கமிந்து மெண்டீஸ் 64, ஜெனித் லியாங்கே 22 ரன் எடுத்தனர். மற்றவர்கள் குறைந்த ரன்னில் வெளியேற இலங்கை அணி, 30.2 ஓவரில் 142 ரன் மட்டுமே எடுத்தது. அதனால் நியூசி 113 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. ரச்சின் ரவீந்திரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நியூசிலாந்து தொடரையும் கைப்பற்றியது.












