விசிக தலைவர் திருமாவளவன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வல்லுறவு, அதில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும், அந்த குற்றச்செயல் பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் உருவாக்கியுள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரையில், கைது செய்யப்பட்ட நபரையும் தாண்டி, ஒரு சிலர் ஈடுபட்டிருக்க கூடும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. ஆகவே அரசு குறிப்பாக காவல்துறை, நேர்மையான முறையில் புலன் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடியாக பிணை வழங்க கூடாது. அவரை சிறையில் வைத்தபடியே புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், யார் அந்த சார் என எதிர்கட்சிகள் கேள்வி கேட்கிறார்கள் என கேட்டபோது, அதனால்தான் கூறுகிறேன். அப்படி ஒரு சந்தேகம் இருப்பதால்தான், நேர்மையான புலன் விசாரணை தேவை என மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.












