திமுக சட்டத்துறை சார்பில் 3வது மாநில மாநாட்டிற்கு சிறப்பு உரையுடன் நிறைவு செய்ய முதல்வர் மு.க ஸ்டாலின் வருகை தர உள்ளதாக திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில், திமுக சட்டத்துறை சார்பில், 3வது மாநில மாநாடு குறித்து சந்திப்பு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக சட்டதுறை சார்பில் நாளை (ஜன 18ம் தேதி) ஜார்ஜ் பள்ளி வளாகத்தில், 3வதுமாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியேற்றிட அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைக்கிறார். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் அறிமுகப்படுத்திய பிறகு முதல்முறையாக பொதுவெளியில் அது பற்றிய கலந்துரையாடல் நடைபெற உள்ளது. திராவிடவியல் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையுடன் மாநாடு நிறைவடைய இருக்கிறது.
இந்த மாநாடு அரசியலமைப்புச் சட்டத்தை சார்ந்து இருப்பதால் குற்றவியல் சட்டம் சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு இருக்காது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நாங்கள் கொண்டாடுவது அம்பேத்கரை கொண்டாடுவதுதான். திமுக சட்டத்துறையில் 10 ஆயிரம் வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சட்டத்துக்கு உட்பட்ட ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. தனிமனித சுதந்திரத்தை இந்த அரசு காப்பாற்றுகிறது என்றார்.












