காந்தி, அம்பேத்கர் படம் இல்லாமல் மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள காலண்டரை சபாநாயகர் திரும்ப பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு, மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மக்களவை செயலகத்திலிருந்து 2025ம் ஆண்டுக்கான மாதாந்திர காலண்டர் உங்களின் கடிதத்துடன் எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய அரசியல் சட்ட வரலாற்றுப் பயணத்தை நினைவு கூரும் இந்த நாட்காட்டியில் மகாத்மா காந்தி, அம்பேத்கரின் படம் இல்லை.
இந்த இருபெரும் ஆளுமைகளின் பங்களிப்பை மறைக்க ஒவ்வொரு நாளும் ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்புறமிருந்த காந்தி மற்றும் அம்பேத்கரின் சிலையையும் அகற்றி நாடாளுமன்ற கட்டிடத்தின் பின்புறம் கொண்டு போய் வைத்துள்ளீர்கள். தற்போது இந்திய அரசியல் சட்டத்தின் 75வது ஆண்டை கொண்டாடுவதன் அடையாளமாக சிறப்பு மாதாந்திர நாட்காட்டியை வெளியிட்டு, அதில் இரு பெரும் தலைவர்களின் படங்களோ, பெயர்களோ இல்லாமல் அச்சிட்டுள்ளீர்கள். இது வரலாற்றை திரிக்கும் திட்டமிட்ட செயல்.
நவீன இந்தியாவை உருவாக்குவதில் இவ்விரு பேராளுமைகள் நல்கிய அரும் பங்களிப்பை அவமதிக்கும் செயல். ஏற்கனவே, அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட கருத்துக்கள் பல கோடி மக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. தற்போது இந்த காலண்டர், மக்கள் உணர்வுகளை மேலும் ரணமாக்கும். இது பெரும் காயத்தை மக்கள் மனதில் உருவாக்கும். எனவே, காலண்டரை திரும்பப்பெற்று காந்தி, அம்பேத்கர் ஆகிய இரு ஆளுமைகளுக்கும் உரிய இடம் தருகிற புதிய காலண்டரை வெளியிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.












