அமெரிக்காவின் செழிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, உலக அமைதிக்காக பங்களித்தவர்கள் மற்றும் அரசு, தனியாரின் சமூக மாற்றத்திற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் அமெரிக்காவில் ஆண்டுதோறும் சுதந்திர பதக்கம் வழங்கப்படுகிறது. குடிமக்களுக்கு வழங்கப்படும் அமெரிக்காவின் மிக உயரிய இந்த விருது இந்த ஆண்டில் 19 பேருக்கு வழங்கப்பட்டது. அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பைடன் விருதுகளை வழங்கி கவுரவித்தார். வழக்கறிஞராக குழந்தைகள் உரிமையை பாதுகாத்ததற்காகவும், உலகளாவிய சுகாதாரத்திற்காக போராடியதற்காகவும், பெண்களின் உரிமையும் மனித உரிமைதான் என அறிவித்ததற்காகவும் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. பிரபல கால்பந்து நட்சத்திரமான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், வேறு பணிகள் காரணமாக அவரால் விழாவில் நேரில் பங்கேற்க முடியவில்லை.
இதே போல, அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அவருக்கு பதிலாக அவரது மகன் அலெக்ஸ் சோரஸ் இந்த விருதை பெற்றுக் கொண்டார். அப்போது அவர் தனது தந்தை சோரஸ் அமெரிக்காவின் தேச பக்தர் என்றும் சுதந்திரம் மற்றும் மனித உரிமைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததாகவும் குறிப்பிட்டார். ஹங்கேரியில் யூத குடும்பத்தில் பிறந்த ஜார்ஜ் சோரஸ் உலகம் முழுவதும் தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவருக்கு விருது வழங்கியதை டிரம்ப் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஜார்ஜ் சோரசுக்கு விருது வழங்கப்பட்டது அமெரிக்காவின் முகத்தில் அறையப்பட்ட மற்றொரு அடி என குடியரசு கட்சியின் முக்கிய தலைவர் நிக்கி ஹாலே கூறி உள்ளார். சோரசுக்கு விருது தந்தது கேலிக்குரியது என எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.












