கேரளாவில் நடைபெற்ற தேசிய சீனியர் வாள்வீச்சு போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் தங்க பதக்கம் வென்று அசத்தி உள்ளனர். 35வது தேசிய வாள்வீச்சு சாம்பியன் ஷிப் போட்டிகள் கடந்த 2 நாட்களாக கேரள மாநிலம் கன்னூரில் நடைபெற்று வருகிறது. இதில் 29 மாநிலங்களை சேர்ந்த சுமார் 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி மற்றும் ஜிசோ நிதி ஆகியோர் தங்க பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர்.
பெண்கள் பிரிவில் 15 க்கு 5 என்ற புள்ளி கணக்கில் முதல் இடம் பிடித்து பவானி தேவி தங்கம் வென்றார். இதே போல் ஆண்களுக்கான பிரிவில் ஜிசோ நிதி 15-11 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றார். மேலும் பெண்கள் பிரிவில் கேரளாவின் அல்கா விசன்னி வெள்ளி பதக்கமும், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஷ்ரேயா குப்தா வெண்கல பதக்கமும் வென்றனர். 3வது நாளான இன்று 168 குழுக்கள் கலந்துகொள்ளும் குழு வாள் போட்டிகள் நடைபெற உள்ளது.












