மராட்டியத்தில் அமைச்சர் பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி வருவதால் சுழற்சி முறையில் அமைச்சர் பதவி தருவதாக அவர்களை சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப்படுத்த முயன்று வருகின்றனர். பெரும் இழுபறிக்கு பின் முதலமைச்சர் பதவியை சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே விட்டு கொடுத்ததை அடுத்து பாஜகவின் தேவேந்திர பட்னவீஸ் மராட்டிய முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் துணை முதலமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.
இதை அடுத்து முக்கிய அமைச்சர் இலாகாக்களை ஒதுக்க கோரி ஷிண்டேவும், அஜித் பவாரும் அழுத்தம் அளித்ததால் அமைச்சரவை பகிர்விலும் பெரும் இழுபறி நிலை நீடித்து வந்தது. பலகட்ட பேச்சுவார்த்தை ஒரு வழியாக முடிவுக்கு வந்ததை அடுத்து மகாயுதி கூட்டணி அமைச்சர்கள் 39 பேர் பதவியேற்றனர். இதில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் 19 பேர் ஷிண்டே, சிவசேனாவுக்கு 11 அமைச்சர் பதவியும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸுக்கு 9 அமைச்சர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மராட்டிய அமைச்சரவையில் இடம் கிடைக்காத சிவசேனா மற்றும் தேசியவாதகாங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்க தொடங்கி இருப்பது மகாயுதி கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் பதவி கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த சிவசேனா ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா கட்சி எம்.எல்.ஏ நரேந்திர போனேகர் கட்சியின் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அதிர்ப்தியாளர்களை சமாதான படுத்தும் முயற்சியாக சுழற்சி முறையில் அமைச்சரவையில் இடம் தருவதாக இரு கட்சிகளின் தலைவர்களும் அறிவித்துள்ளனர். சில அமைச்சர்கள் 2 அரை ஆண்டுகளுக்கு மட்டுமே பணியாற்றி உள்ளதாக தெரிவித்துள்ள அஜித் பவார் அதன் பின் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.












