புதுவை பாஜ எம்எல்ஏக்கள், துணை நிலை ஆளுநரை சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பாஜ எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு ஜான்குமார் மற்றும் ஆதரவு சுயேட்சைகள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஆகியோர் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
இதில் பாஜ ஆதரவு சுயேட்சைகள் அங்காளன், சிவசங்கர் ஆகியோர் சபாநாயகர் செல்வம் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி கடிதம் கொடுத்துள்ளனர். இதன் பின்னணியில் பாஜ எம்எல்ஏக்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து பாஜ மற்றும் ஆதரவு பாஜ எம்எல்ஏக்கள் அடிக்கடி துணைநிலை ஆளுநரை சந்தித்து பேசி வருகின்றனர். ஆனால் என்ன பேசுகிறார்கள் என்பது இதுவரை ரகசியமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார், ஆதரவு சுயேட்சை சிவசங்கர் ஆகியோர் நேற்று ராஜ்நிவாசில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசியுள்ளனர்.
இது குறித்து எம்எல்ஏக்களிடம் கேட்டபோது, இது வழக்கமான சந்திப்புதான். புதுச்சேரி அரசியல் நிலவரம், புதுச்சேரியின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினோம். சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் அவைக்கு வரும்போது, சந்திக்க வேண்டியதுதான். அது இப்போதைக்கு எந்த பிரச்னையும் இல்லை. மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் பிரதமர், அமித்ஷா படம் போட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இதில் ஒன்றும் அரசியல் இல்லை, என்றனர்.












