வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை வரும் 15ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. 2023-2024ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய (டிசம்பர் 31) நேற்று கடைசி நாளாகும். நடப்பு நிதியாண்டில் மட்டும் வருமான வரி கணக்கை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் என 10.41 கோடி பேர் தாக்கல் செய்துள்ளனர்.
இதன் மூலம் ஒன்றிய நிதித்துறை அமைச்சகத்திற்கு ரூ.19.66 லட்சம் கோடி வருமானம் என கூறப்படுகிறது. இதில் 2023-2024ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31ம் தேதி கடைசி நாள் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்ய முடியாதவர்கள் ஒரு சதவீத வட்டியுடன் டிசம்பர் 31ம் தேதிக்குள் (நேற்று) தாக்கல் செய்ய வேண்டும் என வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘‘வருமான வரி கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 2025 ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












